Saturday, August 24, 2013

சதுரகிரி மலையின் மூலிகைகள் ...........தொடர்ச்சி..




பொற்றலைக்கரிப்பான்


சதுரகிரி மலையின் தனித்துவமான மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.  வாருங்கள் காயசித்தி அளிக்கும் மூலிகைகளைப் பற்றிய பதிவினை தொடர்வோம். முந்தைய பதிவின் நிறைவில் குறிப்பிட்ட குருவரிக்கற்றாளைக்கு தென் திசையில் அம்புவிடும் தூரம் சென்றால் பொற்றலைக்கரிப்பான் என்று ஒரு மூலிகை இருக்கிறதாம். அதன் காய் மிளகு போல் இருக்குமாம். அதன் இலையைக் கையால் கசக்கினால் கைகளில் எரிவு எடுக்குமாம். அதன் சாற்றை பாடாணங்களில் (பாஷாணங்கள்) சேர்த்து அரைத்து புடமிட செந்தூரமாகுமாம். அந்த செந்தூரத்தை புசிக்க காய சித்தியுண்டாகுமாம்.

                                                                     உதிரவேங்கை

கலங்கிமுனிவர் வனத்தில் இந்த உதிரவேங்கை மரங்கள் அதிகளவில் காணப்படுமாம். அது வேங்கைமரம் போல் இருப்பதுடன், அதன் தூர் கறுப்பாக இருக்குமாம், இந்த மரத்தை குத்தினால் இரத்தம் போன்ற நிறத்தில் பால்வருமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து உலோகங்களுக்கு சுருக்கிட பேதிக்கும்.  அப்படி பேதித்த உலோகத்தை இந்த மரத்தின் பால் விட்டு உருக்க தங்கமாகும் அந்தத்தங்கத்தை புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

                                                            சாயாவிருட்சம்

யூகிமுனி வனத்தின் வடக்குப் பகுதியில் ஒரு மண் மேடு இருக்கிறதாம் அதை அண்டிய பகுதிகளில் இந்த சாயா விருட்சம் வளர்ந்து இருக்கிறதாம்.
இதற்க்கு நிழற்காந்தன் என்று இன்னும் ஒரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்த விருட்சத்தின் நிழல் நிலத்தில் விழாதாம். அதன் நிறம் சாம்பல் நிறமாகவும் இலை புன்னை மரத்து இலை போலவும், காய் சுருண்ட வெள்ளரிக்காய் போலும் இருக்குமாம். இந்தமரத்தின் பட்டையைச் சீவினால் நீல நிறத்தில் பால்வருமாம். அந்த பாலைக் கொண்டுவந்து அதில் சுத்தி செய்த பாதரசம் விட்டு சூரியப்புடம் போட்டால் இறுகி இருக்குமாம் அதை எட்த்து செந்தூரமாக்கி நெய்யில் குழைத்து ஒருமண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம்.

                                                              செந்தாடுபாவை

மேலே குறிப்பிட்ட சாயாவிருட்சம் இருக்கும் இடத்திற்க்கு நேர் வடக்கே செந்தாடுபாவை  என்னும் ஒரு மூலிகைச் செடி இருக்கிறது. அந்தச் செடி குத்துக்காரைச் செடி போலவும், அதன் இலை சம்மட்டி இலை போலவும் இருக்குமாம். அதன் இலையைப் பிடுங்கி சாறு பிழிந்து அந்தச் சாற்றைக் கொண்டு சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டும். பின் அந்த சூதத்தை எடுத்து சாயா விருட்சத்தின் பாலில் ஏழுநாள் ஊறவைத்து எடுத்துப் புடமிட்டு செந்தூரமாக்கி பசுநெய்யில் குழைத்து ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

 சதுரகிரி பற்றிய சுவாரசியமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.